திருவண்ணாமலை, நவ.11: ஏரி நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
போளூர் அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: துரிஞ்சிக்குப்பம் ஏரி பாசனத்தை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. ஆனால், ஏரி நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்கின்றனர். அதனால், ஏரி முழுமையாக நிரம்புவதில்லை. எனவே, ஏரி நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஏற்கனவே மனு அளித்தோம்.
அதன்படி, குறிப்பிட்ட தேதியில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. போலீஸ் பாதுகாப்பு தரவில்லை என தெரிவிக்கப்பட்டது. எனவே, மழைக்காலம் தொடங்கும் முன்பு ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.