காடையாம்பட்டி, மார்ச் 13: பொட்டிபுரம் ஊராட்சியில், ₹ 9 லட்சம் மதிப்பீட்டில் மயானத்துக்கு செல்லும் தார்சாலையை புதுப்பிக்க பூமிபூஜை நடைபெற்றது. காடையாம்பட்டி அருகே உள்ள பொட்டிபுரம் ஊராட்சியில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் எல்லையில் அமைந்துள்ள மயானத்திற்கு செல்லும் சாலை, கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்டது. இதனால் இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச்செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், 14வது நிதிக்குழுவின் மூலம், மயானத்திற்கு செல்லும் சாலையை புதுப்பிக்க ₹9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பூமிபூஜை நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி செல்வமணி தலைமை வகித்தார். ஓமலூர் ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தராஜ், தார்சாலை பணிகளை தொடங்கி வைத்தார். இந்த சாலை பொட்டிபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து, காமலாபுரம் ஏரி வரை செல்லும் வகையில் புதுப்பிக்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கோவிந்தம்மாள், நிர்வாகிகள் ஆறுமுகம், முத்துசாமி, அர்ஜூனன், பச்சியண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .