விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வரையிலான சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்

நெய்வேலி, மார்ச் 12: விக்கிரவாண்டியில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி கல்லூரி செல்லும் பேருந்துகள் சென்று வருகின்றன.

மேலும் என்எல்சி நிறுவனத்தில் உள்ள சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்களில் இச்சாலை வழியாக என்எல்சி நிறுவனத்திற்கு செல்கிறது.

தற்போது விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலையை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் இருபுறங்களில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகளை கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் நிலம் கையகப்படுத்துவதில் பெரிய அளவில் சிக்கல்கள் எழவில்லை என்றாலும்  சாலை அமைப்பதற்காக பணிகள் கடந்த சில மாதங்களாக மந்த கதியில் நடைபெறுகிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்கு என்எல்சி நிர்வாகம் தங்கள் ஏரியில் சேமிப்பு வைத்திருந்த சாம்பல் கழிவுகளை இலவசமாக சாலை பணிக்காக சிறப்பு அனுமதி பெற்று வழங்கி வருகிறது.

இந்த சாம்பலை நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு வந்து தினமும் சாலையின் இருபுறங்களிலும் உள்ள பள்ளங்களில் நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது மேம்பாலங்கள், பாலங்கள், கால்வாய் உள்ளிட்டவை நடைபெற்று வந்தாலும், இதில் கருங்கல் ஜல்லி,  கான்கிரீட் கலவையை கொட்டி சமன் செய்தல், தார் சாலை அமைத்தல், சாலை நடுவே தடுப்பு அமைத்தல் ஆகிய பணிகள் இதுவரை நடைபெறவில்லை.தற்போது சாலை பணிகளை விரைந்து முடித்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். தற்போது இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி தினந்தோறும் அவ்வப்போது விபத்துகள் நடந்து வருகிறது. எனவே, சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு புதுச்சேரி, மே 22: கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை வேதனையுடன் தெரிவித்தார். ஜி20 தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட ஜி20 நாடுகளில் நேற்று கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. நீடித்த, நிலையான கடல்சார் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் கடல்சார் மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கான தீர்வுகளை கண்டறியவும், இதுதொடர்பாக ஜி20 நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அனைத்து கடல்சார் மாநிலங்களிலும் கடற்கரைத் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை மற்றும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் சார்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது:நிலத்திலிருந்து கழிவுகளை அப்புறப்படுத்த கடலில் கொட்டுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது கடலில் கொட்டப்படும் கழிவுகள் மீன்களின் உணவுக்காக மாறி பின்பு நாமே மீன்களை உண்கிறோம் என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல, கடலில் கொட்டப்படும் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன. தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே சுகாதார கேட்டினால் ஏற்படும் நோய்களை தடுத்ததன் மூலம் கிட்டத்தட்ட ரூ.60 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சார்ந்த மாநிலம். எனவே, புதுச்சேரியில் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிச்சயமாக கொண்டு வர வேண்டும். கடலை சுத்தப்படுத்துவதன் மூலமாக நமது குடலும் சுத்தப்படுத்தப்படுகிறது. நிச்சயமாக இது இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கவர்னர் உறுதிமொழி வாசிக்க, அதனை அனைவரும் ஏற்றனர். தொடர்ந்து, தேசிய மாணவர் படை மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் பேரணியை கவர்னர் தொடங்கி வைத்தார். மேலும், சுற்றுச்சூழல் குறித்த பேச்சு, கட்டுரை, ஓவியம், வண்ணம் தீட்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். சபாநாயகர் செல்வம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் முத்தம்மா, இயக்குநர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.