விக்கிரவாண்டி, மார்ச் 10: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த மருத்துவ வல்லுனர் குழுவினர்கள் ஆய்வு செய்தனர்.விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2010 ம் ஆண்டில் துவக்கப்பட்டது. மருத்துவமனையில் பல்வேறு நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கடந்த 2019 ம் ஆண்டின் இறுதியில் (டிராமாகேர்) விபத்து அவசர சிகிச்சை மையம் நவீனப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டது.மேலும் ரூபாய் 13 கோடி செலவில் மகப்பேறு பிரிவிற்கு தனி கட்டிட வசதி செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இம்மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஆணைப்படி மேலும் சில நவீன மருத்துவ பிரிவுகளை கொண்டு வந்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த திட்டமிட்டு, சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்திலிருந்து ஓய்வு பெற்ற கல்லூரி டீன் விமலா தலைமையில் டாக்டர்கள் சேரணிராஜன், சத்யா ஆகியோர் கொண்டமருத்துவ வல்லுனர் குழுவினர் நேற்று முன்தினம் காலை மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகம், கல்லூரி மற்றும் விடுதி வளாகம் உட்பட பல இடங்களை ஆய்வு செய்து தரம் உயர்த்த தேவையான மருத்துவ உபகரணங்கள் குறித்தும், இட வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். ஆய்வின் அறிக்கையை
வல்லுனர்கள் குழு மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சுகாதார துறைக்கு அனுப்பி தரம் உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது . மருத்துவ கல்லுாரி டீன் குந்தவி தேவி, மருத்துவ கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்எம்ஓ சாந்தி, பொது மருத்துவ துறை தலைவர் டாக்டர் சிவக்குமார், சிறப்பு மருத்துவர் இளையராஜா, தாய் வார்டு துறை தலைவர்கள் அஞ்சன் ராமச்சந்திரநாத், செல்வராஜ், நிர்வாக அதிகாரிகள் ஆனந்தஜோதி, கவிஞர் சிங்காரம் உட்பட அனைத்துதுறை தலைவர்கள், டாக்டர்கள் ஆய்வின் போது உடனிருந்தனர் .