புதுக்கடை,பிப்.21: குமரியில் பிரசித்திபெற்ற சிவாலய ஓட்டம் நேற்று தொடங்கியது.குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விளவங்கோடு, கல்குளம் தாலுகா பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களை பக்தர்கள் மாலை அணிந்து, நோன்பு இருந்து ஓடியும், நடந்தும் சென்று தரிசிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடந்து வருகிறது. அதன்படி முதல் சிவாலயமான புதுக்கடை அருகே முஞ்சிறை திருமலை மகாதேவர் ஆலயத்தில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர்.
பக்தர்கள் காவி வேட்டி மட்டும் அணிந்து, இடுப்பில் துண்டு, கையில் வசிறி, சுருக்கு பையில் விபூதி ஆகியவற்றுடன் முன்சிறையில் உள்ள திருமலை மகாதேவரை தரிசித்த பிறகு பூசாரி வழங்கும் விபூதியை பெற்று, ‘கோவிந்தா... கோபாலா...’ என்ற கோஷமிட்டவாறு நடக்க தொடங்கினார்கள்.இதையடுத்து பக்தர்கள் திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு வீரபத்திரர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோயில், பந்நிப்பாகம் சந்திர மவுலீஸ்வரர் கோயில், கல்குளம் நீலகண்ட சுவாமி கோயில், மேலாங்கோடு காலகாலர் கோயில், திருவிடைக்கோடு சடையப்ப நாதர் கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில், நட்டாலம் சங்கர நாராயணனார் கோயில் ஆகிய கோயில்களை பகல் மற்றும் இரவில் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை ஓடியும், நடந்தும் சென்று தரிசிக்கின்றனர்.
இரவு முழுவதும் தூங்கா நோன்பிருந்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர். சிவாலயம் ஓடும் பக்தர்களுக்கு ஒவ்வொரு கோயிலிலும் சாமி தரிசனம் செய்த பிறகு பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது. முஞ்சிறை முதல் திருப்பன்றிகோடு வரையிலான 11 கோயில்களில் விபூதி பிரசாதமாக வழங்கப்படும். கடைசி கோயிலான நட்டாலம் கோயிலில் சந்தனம் பிரசாதமாக வழங்க படுகிறது.ஆரம்ப காலங்களில் உள்ளூர் பக்தர்கள் கால் நடையாக மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தனர். தற்போது வாகனங்களில் அனைத்து தரப்பினரும் சென்று தரிசிக்கும் நிகழ்ச்சியாக மாறி உள்ளது. அதிலும் கேரளா உள்ளிட்ட வெளியூர் பயணிகள் வருகை வருடா வருடம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் கடந்த ஆண்டுகளை விட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.