×

மாவட்டம் முழுவதும் சந்து கடைகளில் மது விற்பனை படுஜோர்

சேலம், பிப்.11: சேலம் மாவட்டத்தில் சந்து கடைகளில் மதுவிற்பனை களை கட்டியிருக்கிறது. தினசரி மாமூலில் காவல்துறை அதிகாரிகள் கல்லா கட்டுவதாக புகார் எழுந்துள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளை அரசு நடத்தும் நிலையில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மலைப்பகுதிகளில் காய்ச்சி, ஊருக்குள் கடத்தி வந்து விற்பனை செய்யும் கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்கின்றனர். இந்த வகையிலான கள்ளச்சாராயம் தடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசு மதுபானங்கள், கடைகள் பூட்டப்பட்ட பின் ஆங்காங்கே அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலை அதிகரித்துள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகளை குறைக்கும் நோக்கில், அரசு தரப்பில் படிப்படியாக கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில், அது இயங்கும் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது.

 இந்த நேர குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபிறகு, ஆளும் தரப்பை சேர்ந்தவர்கள், பல இடங்களில் சந்து கடைகளை திறந்து, எவ்வித அச்சமும் இன்றி 24 மணி நேரமும் டாஸ்மாக் மதுபானங்களை அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இதற்கு போலீசார் துணை நிற்கின்றனர் என்பது தான் மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. சேலம் மாநகரில் 150க்கும் மேற்பட்டோர், ரகசியமாக சந்து கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆளும் கட்சி நிர்வாகிகளின் உறுதுணையோடு, போலீசாருக்கு ‘வைட்டமின்- ப’ வை கொடுத்துவிட்டு சந்து கடைகளை நடத்துகின்றனர். தினசரி மாமூல், மாத மாமூல் என போலீஸ் அதிகாரிகளுக்கு கைநிறைய அள்ளிக்கொடுப்பதால், யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இந்த விவகாரத்தை பற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காக, தினமும் 4 மதுபாட்டில், 5 மதுபாட்டில் கையில் வைத்திருந்ததாக 10 முதல் 15 வழக்குகளை பதிவு செய்கின்றனர். மாநகர மதுவிலக்கு போலீசாரும் இத்தகைய வழக்குகளை தான் பதிவு செய்கின்றனர். சந்து கடைகள் நடத்துபவர்களை சிறையில் அடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.

சேலம் மாவட்டத்தை பொருத்தவரை பேளூர், காரிப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர், தலைவாசல், சங்ககிரி, மேட்டூர், இடைப்பாடி, ஓமலூர், தாரமங்கலம் பகுதிகளில் சந்துகடைகளில் மதுவிற்பனை கனஜோராக நடந்து வருகிறது. அந்த பகுதிகளில் மாவட்ட போலீசார், கல்லா கட்டி வருகின்றனர். இங்குள்ள சந்து கடைகளில், 24 மணி நேரமும் மது பாட்டில்கள் கிடைக்கிறது. மாவட்ட போலீசாரும், 5 பாட்டில், 10 பாட்டில் மதுபானங்களுடன் சிக்கினார்கள் என தினமும் 20க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்கின்றனர். இதில் சிக்கும் நபர்களை, சொந்த ஜாமீனில் விடுவித்து விடுகின்றனர். எனவே, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட எஸ்பி தீபாகனிகர் ஆகியோர் நேரடியாக களம் இறங்கி, அனைத்து பகுதியிலும் தீவிர சோதனை நடத்தினால் மட்டுமே, சந்து கடைகளில் மதுவிற்பனையில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய இயலும். அதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Padujore ,alley shops ,district ,
× RELATED பெண் தொடர்பு காரணமாக போலீஸ்காரர் கொலை: விசாரணையில் திடுக் தகவல்