×

தைப்பூச பக்தர்கள் வருகை எதிரொலி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பழநி, பிப்.6: தைப்பூச பாதயாத்திரை பக்தர்களின் வருகை எதிரொலியாக நாளை முதல் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை நடக்கிறது. நாளை மறுநாள் தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சிகளைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். நாளை முதல் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவர். இதுபோன்ற காலங்களில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

இதன்படி நாளை முதல் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டன்சத்திரத்திலேயே போக்குவரத்து நிறுத்தப்படும். பழநி வரும் வாகனங்கள் வாகனங்கள் கள்ளிமந்தையம், வாகரை, தொப்பம்பட்டி, புளியம்பட்டி வழியாக வந்தடையுமாறு மாற்றி அமைக்கப்படும். இதுபோல் கூட்டத்தைப் பொறுத்து உடுமலையில் இருந்து பழநி நோக்கி வரும் வாகனங்கள் தாழையூத்து, மேல்கரைப்பட்டி, தொப்பம்பட்டி வழியாக பழநி வருமாறு மாற்றி அமைக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Traffic change ,
× RELATED பிரதமர் மோடி வருகை!: சென்னையில்...