×

மனைவியுடன் கள்ளத்தொடர்பு எலக்ட்ரீஷியனை தாக்கிய கட்டிட மேஸ்திரி கைது

வேட்டவலம், பிப்.4: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த எலக்ட்ரீஷியனை தாக்கிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். வேட்டவலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் நவநீதி(31), எலக்ட்ரீசியன். இவரது மனைவி தமிழேந்தி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அதேபகுதியைச் சேர்ந்தவர் குமார்(37), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நவநீதிக்கும், குமாரின் மனைவி சந்திராவுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாம். இதனால், குமாருக்கும் அவரது மனைவி சந்திராவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சந்திரா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி குமார், நவநீதிக்கு போன் செய்தார். இதில், ‘நீ சொரத்தூர் அருகே உள்ள காளியங்குப்பம் ஏரிக்கு வரவேண்டும் என்றார். அதன்படி, அவரும் ஏரிக்கு வந்தார். பின்னர், 2 பேரும் சேர்ந்து மது அருந்தினர்.
இதில் குமார், நவநீதியிடம் ‘எனக்கு நீ துரோகம் செய்துவிட்டாய்’. உன்னை நான் கொலை செய்யப்போறேன’் என்றார். இதனால், 2 பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குமார், நவநீதியை அருகில் இருந்த கல்லால் சரமரியாக தாக்கினாராம். இதில், நவநீதி படுகாயமடைந்தார்.

இதையறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நவநீதியின் மனைவி தமிழேந்தி வேட்டவலம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு வழக்குப்பதிந்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Architect ,counterfeit electrician ,
× RELATED நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்:...