×

திருவெண்ணெய்நல்லூர் அருகே மினிலாரி மோதி 2 மாடுகள் பலி

திருவெண்ணெய்நல்லூர், பிப். 4: திருவெண்ணெய்நல்லூர் அருகே மாட்டு வண்டி மீது மினிலாரி மோதி விபத்துக்குள்ளானதில் 2 மாடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த வீரப்பன் மகன் ஜெயக்குமார் (38), கோவிந்தன் மகன் சர்வேஷ்வரன் (37) ஆகிய 2 பேரும் தங்களுக்கு சொந்தமான மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு கடலூர்-சித்தூர் சாலை வழியாக மாதம்பட்டு கிராமத்தில் உள்ள முருகன் என்பவரின் கரும்பு தோட்டத்துக்கு, கரும்பு ஏற்ற சென்றனர்.

அப்போது தர்மபுரி மாவட்டம் வகுரப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் பெருமாள் (19) என்பவர் அவரது சித்தப்பாவுக்கு சொந்தமான மினிலாரியை எடுத்து கொண்டு மடப்பட்டு பகுதியில் வைக்கோல் ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்தார். மாதம்பட்டு ராகவன் கால்வாய் பாலம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி முன்னால் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டிகளின் மீது மோதியது. இதில் ஜெயக்குமார், சர்வேஷ்வரன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும் ஜெயக்குமாருக்கு சொந்தமான 2 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. சர்வேஷ்வரனுக்கு சொந்தமான 2 மாடுகள் காயமடைந்தன.

இதுகுறித்து தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த ஜெயக்குமார், சர்வேஷ்வரன் ஆகிய 2 பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சாலையின் நடுவே தலைகுப்புற கிடந்த மாட்டு வண்டிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : collision ,Thiruvennainallur ,
× RELATED மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு