புதுச்சேரி, ஜன. 31: கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தனவேலு எம்எல்ஏவின் பதவியை பறிக்க வேண்டுமென காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மனு கொடுத்திருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுவை பாகூர் ெதாகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து பற்றாக்குறை மற்றும் ஆம்புலன்சுக்கு டிரைவர் இல்லை எனக் கூறி போராட்டம் நடத்தினார். அப்போது, முதல்வர் நாராயணசாமியை கடுமையாக விமர்சித்து பேசினார். தொடர்ந்து கவர்னர் கிரண்பேடியை சந்தித்து முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து தனவேலு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரிடம் விளக்கம் கேட்டு மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் நோட்டீஸ் அனுப்பினார். காங்கிரஸ் கட்சியை கண்டிக்கும் வகையில் நீதிகேட்டு நேற்று முன்தினம் பேரணி நடத்தினார். பின்னர் கவர்னர் கிரண்பேடியை மீண்டும் சந்தித்து மனு கொடுத்தார். வெளியே வந்த தனவேலு கூறுகையில், என்னை கட்சி பதவியில் இருந்து நீக்கலாம். முடிந்தால் எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்கிப் பாருங்கள் என சவால் விடுத்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், அரசு கொறடா அனந்தராமன், எம்எல்ஏக்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி ஆகியோர் முதல்வர் நாராயணசாமியை சட்டசபையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.பின்னர் சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து தனவேலுவை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் ெசய்யுமாறு கடிதம் கொடுத்தனர். அதில் கட்சி தாவல்தடை சட்டம் 43ன்படி அட்டவணை 10ன் கீழ், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் 14(1)ன் கீழ் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, ஆளும் காங்கிரஸ் அரசை கலைக்க முயற்சி செய்துள்ளார். கவர்னரை சந்தித்து பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து, காங்கிரஸ் அரசை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென தெரிவித்துள்ளார். காங் எம்எல்ஏவாக இருந்து கொண்டு, மாற்று கட்சியினருடன் கை கோர்த்துக்கொண்டு அரசை கவிழ்க்க நினைக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதத்தை பெற்றுக்கொண்ட சபாநாயகர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கொடுத்த கடிதத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.