உளுந்தூர்பேட்டை. ஜன. 28: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கருவேப்பிலைபாளையம் கிராமம். மாவட்டம் பிரிக்கும் போது இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஒரு தரப்பு மக்கள் தங்களை விழுப்புரம் மாவட்டத்தோடு இணைக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து கருவேப்பில்லை பாளையம் கிராமத்தை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைத்தனர். இதற்கு முன்னாள் எம்எல்ஏ ஞானமூர்த்தி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் ராஜாமணி தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தும், புதிய மாவட்டமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்க்க வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து வருகைப்பதிவேட்டில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம், மதி அன்பரசு, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவலிங்கம் மற்றும் மகளிர் குழுக்களை சேர்ந்த மகளிர்கள் கிராம பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.