உடுமலை,ஜன.28: தை அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் திருமூர்த்திமலைக்கு மாட்டு வண்டிகளில் ஏராளமான விவசாயிகள் வந்தனர்.அணையில் யாரும் இறங்கி குளிக்காத வகையில், பெருமாள் கோயில் வரை பொதுப்பணித்துறை சார்பில் தடுப்பு கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மாட்டுவண்டிகள் கம்பிவேலியை சேதப்படுத்தி உள்ளே நுழைந்தன. அணைக்குள் சென்று மாடு மற்றும் வண்டிகளை கழுவும் பணியில் சிலர் ஈடுபட்டனர்.கம்பிவேலியை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் தை அமாவாசை முடிந்த பிறகு, சுற்றுலாப் பயணிகளும் தடை மீறி அணைக்குள் செல்லும் வாய்ப்பு ஏற்படும் என நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.இதன் எதிரொலியாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர். சேதமடைந்த கம்பியை சீரமைத்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் அணைக்குள் அத்துமீறி நுழைய முடியாது. உடனடி நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.