பள்ளிப்பட்டு, ஜன. 28: குடியுரிமை சட்டத்தை ஆதரித்து அதிமுக அரசு வரலாற்று தவறை செய்து விட்டது என முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கூறினார். திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூர் திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பேரூர் பொறுப்பாளர் டி.ஆர்.கே.பாபு தலைமையில் நடைபெற்றது. பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது: ஆதிக்க இந்தியை எதிர்த்து அன்னை தமிழுக்காக உயிர் நீத்த பூக்களுக்கு ஆண்டு தோறும் திமுக சார்பில் வீரவணக்க நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. ஒரு மொழிக்காக உயிரை விட்ட சரித்திரம் தமிழகத்தில் மட்டுமே நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து இளைஞர்கள், மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தை பெரியார், அண்ணா, கருணாநிதி முன் எடுத்துச் சென்றனர். திமுக எம்.எல்.ஏக்கள் பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைத்த அதிமுகவிற்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தும் தகுதி இல்லை.
மொழிக்காக போராடிக்கொண்டிருக்கும் திமுகவிற்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். தற்போது நாட்டை மத ரீதியாக பிரித்து அரசியல் ஆதாயம் தேட துடித்து வரும் பா.ஜவிற்கு தமிழக அதிமுக அரசு துணை நிற்கின்றது. குடியுரிமை சட்டத்தை அதிமுக அரசு ஆதரித்து வரலாற்று தவறு செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதில், தலைமை கழக பேச்சாளார் மாசிலாமணி, நெசவாளரணி துணைத் தலைவர் நாகலிங்கம், எஸ்.ஆர். ரவியோ, சி.எம்.ரவி, அம்மையார்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன், பேரூர் நிர்வாகிகள் ஜெ.எம்.சங்கரன், இ.கே.உதயசூரியன், டி.எம்.சுகுமார், என்.எஸ்.மோகன், எம்.கே.தாஸ், பி.கே.எஸ்.பழனி, ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துரெட்டி, பாரதி, சுகுணா நாகவேல், நதியா நாகராஜ், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். முடிவில் என்.எ.சத்தியா நன்றி கூறினார்.