நாங்குநேரி, ஜன. 24: நாங்குநேரி ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில், ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட், பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கிறது. காலை 6 மணி முதல் 10 மணி, மாலை 4 முதல் இரவு 11 மணி வரை பயணிகள் ரயிலும், மற்ற நேரங்களில் சரக்கு ரயில்களும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. சிக்னல் பிரச்னைக்காக இந்த கேட்டை ரயில்வே நிர்வாகத்தினர் அடைத்து வைத்துள்ளனர். விவசாயிகள் தேவையை கருதி கேட்டுக் கொண்டால் மட்டும் கேட் திறக்கப்படும் என ரயில்வே தரப்பில் உறுதி அளிக்கப்பட்டாலும், ரயில்கள் வருகைக்காக காத்திருக்கும் ஊழியர்கள் கேட்டை திறக்க முடிவதில்லை என்கின்றனர். இதனால் பெரும்பாலான நேரங்களில் வயலுக்கு உரம் மற்றும் விளைபொருட்களை எடுத்து வரவும், உழவு மற்றும் அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்லவும் முடிவதில்லை. சுமார் 2 கிமீ வரை பொருட்களைச் சுமந்து செல்ல வேண்டிய சிரமம் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் நலன் கருதி துவக்கத்தில் அமைக்கப்பட்ட ரயில்வே கேட், தற்போது ரயில் போக்குவரத்து அதிகமானதால் இடையூறு மிகுந்ததாக மாறியுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.மேலும் தற்போது இருவழி ரயில் பாதைப்பணிகள் நடைபெற உள்ளதால், அந்த பணியுடன் இந்த ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.