
திருப்பூர்,ஜன.24: திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் கிராம ஊராட்சித் துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கு மறைமுக தேர்தல், கடந்த 11ம் தேதி நடந்தது. இதில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொங்கூர் கிராம ஊராட்சி மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெல்லம்பட்டி மற்றும் எல்லப்பாளையம்புதூர் ஆகிய கிராம ஊராட்சிகளில் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் கிராம ஊராட்சி துணைத்தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. மேற்கண்ட 3 ஊராட்சிகளிலும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நாளில் பின்னர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 262 கிராம ஊராட்சிகளில், கிராம ஊராட்சி துணைத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 3 கிராம ஊராட்சி துணைத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தவுப்படி வருகிற 30ம் தேதி காலை 10.30 மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.