×

பெயிண்ட் கடையில் தீ விபத்து

பல லட்சம் பொருட்கள் நாசம்சேலம், ஜன.24:  சேலம் ஜான்சன்பேட்டை சேர்ந்தவர் கேசவன்(43). இவர்,  சின்னதிருப்பதி மெயின்ரோடு ராஜகணபதி நகரில் பெயிண்ட் கடை வைத்துள்ளார். கடையில் சரவணன் என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை கடையின் உரிமையாளர் கேசவன், நடைபயிற்சிக்காக புறப்பட்டு சென்றார்.  கடையில் சரவணனும், கேசவனின் உறவினரான வெங்கடேஷ்(18) ஆகியோர் இருந்தனர்.  பின்னர் சரவணனை பார்ப்பதற்காக அவரது அக்கா மகன் வெங்கடேஷ்வரன்(20) வந்தார். மூவரும் கடையில் இருந்தனர். அந்நேரத்தில் கடையின் உள்ளே திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர் சரவணன் மற்றும் அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றினர். அதற்குள் அங்கிருந்த தின்னர் மீது தீப்பிடித்து கடைமுழுவதும் எரிந்தது. அங்கிருந்தவர்கள் கடையில் இருந்த பெயிண்ட் பக்கெட்டுகளை வெளியே எடுத்துவந்தனர். இதில் வாலிபர் வெங்கடேஷ்வரனின் 2 காலிலும் தீப்பிடித்து கொண்டது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும், செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பெயிண்ட் பக்கெட்டுகள், 2 கலவை எந்திரம் ஆகியவை எரிந்து நாசமானது. மின்கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : paint shop ,
× RELATED பெயின்ட் கடையில் தீ விபத்து: 4 சிறுவர்கள் 3 பெண்கள் பலி