ஊட்டி, ஜன. 20: நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலங்களில் 12 பேர் தற்காலிக பிரிவு எழுத்தர்களாக பணியாற்றி வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட்ட வழங்கல்துறை பணிகள் கணினி மயமாக்கப்பட்டதால் தற்காலிக பிரிவு எழுத்தர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதில் குன்னூர் தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியாற்றி தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட மாற்று திறனாளியான விஜயகுமார் என்பவர், தனக்கு மாற்று பணி வழங்க நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக மாற்று திறனாளியான விஜயகுமார், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:குன்னூர், ஓட்டுப்பட்டறை, வெள்ளாளபுரம் பகுதியை சேர்ந்த நான் ஒரு மாற்று திறனாளி. கடந்த 25 ஆண்டுகளாக குன்னூர் தாலுகாவில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் தற்காலிக பிரிவு எழுத்தராக பணியாற்றி வந்தேன். தற்போது அனைத்து பிரிவுகளும் கணினிமயமாக்கப்பட்டு விட்ட நிலையில் என்னை பணியில் இருந்து நிறுத்தி விட்டார்கள்.. நான் எனது இரு பெண் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். சம்பளம் இல்லாததால் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாத நிலை உள்ளது. மேலும் எனது இரு பிள்ளைகளுக்கும் கடந்த 5 மாதமாக பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் பள்ளி அனுப்பவில்லை. அன்றாடம் பிழைப்பிற்ேக வழியின்றி கடன் சுமையுடன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். மாற்று பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல முறை மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை. எனவே நான், எனது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் சேர்த்து கருணை கொலை செய்ய அனுமதி வழங்கிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.