வேலூர், ஜன.9: வேலூர் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் 5.77 கோடியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான குடோன் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை சிறப்பு தலைமை பொறியாளர் ஞானமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் 30 மாவட்டங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான குடோன்கள் கட்ட 120 கோடியே 87 லட்சத்து 42 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்திலும், டோல்கேட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரே இடமாக வைக்க கலெக்டர் அலுவலகத்தில் 5.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குடோன் அமைப்பதற்கான பூமி பூஜையுடன் கட்டிட பணி கடந்த மாதம் தொடங்கியது. மொத்தம் 1,527 சதுர மீட்டரில் 16,437 சதுர அடியில் லிப்ட் வசதி மற்றும் லாரிகள் நின்று செல்வதற்கான வசதிகள் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் கட்டிட பணிகளை பொதுப்பணித்துறை சிறப்பு தலைமை பொறியாளர் ஞானமூர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டிடப்பணிகள் தரமாக கட்டப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். மேலும் கட்டிட பணிகளை 12 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, உதவி பொறியாளர் அண்ணாதுரை உட்பட பலர் உடன் இருந்தனர்.