×

வீட்டை வெளிப்பக்கம் பூட்டி தீ வைத்து பெயின்டர் குடும்பத்தை எரித்து கொல்ல முயற்சி

பல்லாவரம், டிச. 30: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெயின்டரை குடும்பத்துடன் தீவைத்து எரிக்க முயன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், மல்லிமா நகர், பள்ளிகூடம் தெருவை சேர்ந்தவர் கண்ணபிரான் (55). இவருக்கு திருமணமாகி கஸ்தூரி என்ற மனைவி மற்றும் மணிவண்னன், சஞ்சய் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். கண்ணபிரான் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெயின்டராக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கண்ணபிரான் வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு குடும்பத்துடன் தூங்க சென்றார். நள்ளிரவு 1.30 மணியளவில் தனது வீடு தீப்பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சி அடைந்த கண்ணபிரான் குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரது வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு வீட்டின் உள்ளே பட்டாசை தூக்கிப்போட்டு தீ வைத்து சென்றது தெரிய வந்தது.

இவர்களது அலறல் சத்தம்கேட்டு திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து கண்ணபிரான் குடும்பத்தினரை மீட்டனர். வீட்டின் உள்ளே தீ பரவியதில் வீட்டில் இருந்த பைக், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. தகவலறிந்து சங்கர் நகர் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, கண்ணபிரானுக்கும் அவரது தம்பியான அதே பகுதியை சேர்ந்த சம்பத் (53) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வருவது தெரிய வந்தது.  இதனால் கண்ணபிரானை பழி வாங்குவதற்காக அவரது தம்பி இந்த சதி செயலில் ஈடுபட்டாரா? வேறு ஏதேனும் காரணமா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : house ,painter ,
× RELATED வாதத்துக்கு மருந்து உண்டு,...