திருவண்ணாமலை, டிச.30: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மூன்றாம் பருவ பாடபுத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. அதையொட்டி வட்டார கல்வி அலுவலகங்களுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் ஆய்வு செய்தார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முப்பருவ கல்வி முறை நடைமுறையில் இருந்து வருகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என முப்பருவங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பருவத்திற்கு புதிய பாடப்புதகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நப்பு கல்வி ஆண்டின் மூன்றாம் பருவத்திற்கான 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் கடந்த மாதம் முதல் பள்ளிகல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், தற்போது அரையாண்டு தேர்வு நிறைவடைந்து வரும் 3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. அதையொட்டி பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளே அனைத்து மாணவர்களுக்கும் 3ம் பருவ பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகளை வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதையொட்டி, திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் உள்ள 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நேற்று நடந்தது.
திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே உள்ள கார்மேல் தொடக்கப்பள்ளியிலிருந்து பாடப்புத்தகங்கள் வாகனங்கள் மூலம் அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட கல்வி அலுவலர் அருட்செல்வம், நேர்முக உதவியாளர் சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் வரும் 3ம் தேதி அன்று மாணவர்களுக்கு முன்றாம் பருவத்திற்கான நோட்டு மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. தற்போது வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதன் பின்னர் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை டிஎம் கார்மேல் பள்ளியிலிருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார கல்வி மையங்களுக்கு பாடப்புதகங்கள் அனுப்பும் பணியை முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் பார்வையிட்டார். உடன் மாவட்ட கல்வி அலுவலர் அருட்செல்வம். அடுத்த படம்: மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார கல்வி மையங்களுக்கு பாடப்புதகங்கள் அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.