×

நல்லவாடு அருகே முகத்துவாரத்தில் கரை ஒதுங்கிய வாலிபர் சடலம்

பாகூர், டிச. 18:புதுச்சேரி நல்லவாடு அருகே முகத்துவாரத்தில் வாலிபர் சடலம் கரை ஒதுங்கியது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் நல்லவாடு மற்றும் பனித்திட்டு இடையே உள்ள முகத்துவாரப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதைப்பார்த்த கடலோரப்பகுதி மீனவர்கள் தவளக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலமாக கிடந்தவருக்கு 35 வயது இருக்கும். சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர் யார், எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமானவரா? அல்லது மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்த மீனவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் சடலம் கரை ஒதுங்கிய சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Nallavadu ,gateway ,
× RELATED கடல் அலையில் சிக்கி பிளஸ் 2 மாணவன் பலி