உளுந்தூர்பேட்டை, டிச. 13: உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கருவேப்பிலைப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கருவேப்பிலைபாளையம் கிராமத்தை ஒரே கிராம ஊராட்சியாக அறிவித்து விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்றும் என கருப்புகொடி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் மற்றொரு தரப்பினர் திருநாவலூர் ஒன்றியத்தில் இணைத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும் என விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து மனு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தொடர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வகையில் நேற்று மாநில வருவாய்துறை நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன் கருவேப்பிலைப்பாளையம் கிராமத்திற்கு நேரில் சென்று கிராம மக்களிடம் இந்த பிரச்னை குறித்து விசாரணை செய்தார். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து உரிய விசாரணை செய்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர்கள் விழுப்புரம் அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி கிரண்குராலா, மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.