அவிநாசி, நவ. 28: அவிநாசி ஒன்றியம், சின்னேரிபாளையம் ஊராட்சியை சேர்ந்த ரங்கா நகரில் வசிப்பவர் பழனிசாமி (46). இவர் அவிநாசியில் நூல் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் கடைக்குச் சென்று விட்டார். நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று இரும்பு கம்பியால் வீட்டின் பூட்டை உடைத்துள்ளார். உள்ளே சென்ற மர்ம நபர் வீட்டில் நகை, பணம் ஏதும் இல்லாததால் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை வைத்து குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரங்கா நகரில் 5 முறை வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.