வடலூர், நவ. 27: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டதாக இருக்கிறது. குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் அரசு அனுமதி பெறாத மாமிச கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இங்கு மாமிசத்திற்கு வெட்டப்படும் மாடுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் கோழிகளின் கழிவுகளை அங்கேயே கடைக்காரர்கள் கொட்டிவிடுவதால் அதனை தெரு நாய்கள், பறவைகள் உணவுக்காக எடுத்து செல்லும்போது தெருக்கள் முழுவதும் வீசி செல்கின்றன. இதனால் தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் வெட்டபடும் ஆடு, மாடுகளின் கழிவுகள் மற்றும் அதனை கழுவும் அசுத்தமான நீரை கழிவுநீர் கால்வாயில் கொட்டிவிடுவதால் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்று நோய்கள் பரவுவதாக குறிஞ்சிப்பாடி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில், பொதுமக்களின் சார்பாக, சுகாதார ஆய்வாளரிடம் பலமுறை புகார் அளித்தும் அவர் எந்தவித நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். குறிஞ்சிப்பாடியில் கடைவீதி பகுதியில் மாமிச கடைகளுக்கு என கட்டிடம் இருந்தும் மாமிச கடை வியாபாரிகள் இஷ்டத்திற்கு பொது இடத்தில் கடைகளை திறந்து பொதுமக்களை சுகாதார சீர்கேட்டுக்கு ஆளாக்குகிறார்கள்.
மேலும் குறிஞ்சிப்பாடி குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் அதிகம் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குட்டிகளை ஈன்ற பன்றிகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனை உடனடியாக பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மாமிச கடைகளை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.