சின்னசேலம், நவ. 27: கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கேட்டு தினக்கூலி தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கச்சிராயபாளையம், வடக்கநந்தல், அக்கராயபாளையம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி பயின்ற, அல்லாத 60க்கும் மேற்பட்டோர் தினக்கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் பலர் திருமணமான நிலையிலும் குறைந்த ஊதியத்திலேயே வேலை செய்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்குவதில்லை என கூறப்படுகிறது. இவர்கள் ஊதிய உயர்வு, தொடர்ந்து பணி வழங்குதல் போன்ற கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இந்த பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களுக்கு பணி வழங்காமல் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது, பிற ஆலை தொழிலாளர்களுக்கு இங்கு வேலை வழங்குவதை ஆலை நிர்வாகம் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அதையும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ளூர் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அதையும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. ஆகையால் ஊதிய உயர்வு, தொடர்ந்து பணி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள் ஆலையின் முன்பு திரண்டு நின்று தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த சம்பவம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.