×

சாலையோரம் வசித்த மூதாட்டியிடம் கத்தை கத்தையாக சிக்கிய பணம் புதுவையில் பரபரப்பு

புதுச்சேரி, நவ. 7: புதுச்சேரியில் சாலையோரம் பிளாட்பாரத்தில் வசித்த மூதாட்டியிடம் கத்தை, கத்தையாக பணம் இருந்தது கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர். பணத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் பிரசித்திபெற்ற வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலுக்கு சொந்தமாக 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக இந்த கடைகள் புதுப்பிக்கும் பணி மற்றும் கோயில் திருப்பணிகள் நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேகம் முடிவடைந்து மீண்டும் கடைகளை திறந்து, ஏற்கனவே அங்கு கடைகள் வைத்திருந்தவர்களிடம் வாடகைக்கு விட கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், கடைகளுக்கு முன்பாக பிச்சைக்காரர்கள் இடத்தை ஆக்கிரமித்துக் காண்டனர்.இந்நிலையில், கோயில் நிர்வாகத்தினர் அந்த கடைகள் முன்பு இருந்தவர்களை நேற்று காலை அப்புறப்படுத்தினர். அப்போது ஈஸ்வரன் கோயில் வீதியில் 70 வயது மூதாட்டி ஒருவர், அந்த இடத்தை விட்டு நகராமல் பிடிவாதமாக இருந்தார். இதனால் அவர் வைத்திருந்த பையை எடுத்து திறந்து பார்த்தபோது, அதில் கத்தை, கத்தையாக பணம் இருந்தது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வழியாக சென்ற மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். முதியோர் உதவித்தொகை வாங்குவதற்கான புத்தகம், வங்கியில் கணக்கு வைத்திருப்பதற்கான புத்தகமும், அதில் ரூ.66 ஆயிரம் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. பின்னர், அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் உதவியுடன் அந்த பணத்தை எண்ணி பார்த்ததில் ரூ.15 ஆயிரம் இருந்தது.

இது குறித்து கோயில் நிர்வாகத்தினர், பெரியகடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த பணத்தை பெற்றுச் சென்றனர். இதனால் அந்த மூதாட்டி, பணம் போச்சே... போச்சே... என கதறி அழுதார். மேலும், அங்கிருந்த அனைவரையும் திட்டி தீர்த்தார்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், புதுச்சேரி புது சாரம் வெங்கடேஸ்வரா நகர் அவ்வை வீதியை சேர்ந்த ரமணன் மனைவி பர்வதம் (70) என்பதும், அவரது சொந்த ஊர் கள்ளக்குறிச்சி என்பதும், அவருக்கு புதுச்சேரி, கள்ளக்குறிச்சி மற்றும் சென்னையில் உறவினர்கள் இருப்பதும் தெரியவந்தது. கடந்த 6 மாதமாகத்தான் ஈஸ்வரன் கோயில் இடத்தில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். உறவினர் ஒருவரிடம் அறிவுரை கூறி அந்த பணத்தை ஒப்படைத்தனர். மேலும், மூதாட்டி பர்வதத்தை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து மூதாட்டியை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு அந்த உறவினரிடம் கூறினர்.
இச்சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.




Tags : roadside elder ,
× RELATED புதுவையில் பரபரப்பு சாலையோர மூதாட்டியிடம் கத்தை கத்தையாக பணம்