×

புதுவையில் பரபரப்பு சாலையோர மூதாட்டியிடம் கத்தை கத்தையாக பணம்

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையோரம் வசித்த மூதாட்டியிடம் கத்தை, கத்தையாக பணத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோயில் கடைகளுக்கு முன்பாக பிச்சைக்காரர்கள் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.இவர்களை கோயில் நிர்வாகத்தினர் நேற்று காலை அப்புறப்படுத்தினர். அப்போது ஈஸ்வரன் கோயில் வீதியில் 70 வயது மூதாட்டி ஒருவர், அந்த இடத்தை விட்டு நகராமல் பிடிவாதமாக இருந்தார். இதனால் அவர் வைத்திருந்த பையை திறந்து  பார்த்தபோது, அதில் கத்தை, கத்தையாக பணம் இருந்தது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதியோர் உதவித்தொகை வாங்குவதற்கான புத்தகம், வங்கியில் கணக்கு வைத்திருப்பதற்கான புத்தகமும், அதில் ரூ.66 ஆயிரம் டெபாசிட்  செய்யப்பட்டு இருந்ததும் தெரியவந்தது. பின்னர், பணத்தை எண்ணி பார்த்ததில் ரூ.15 ஆயிரம் இருந்தது.

இது குறித்து கோயில் நிர்வாகத்தினர், பெரியகடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த பணத்தை பெற்றுச் சென்றனர். இதனால் அந்த மூதாட்டி, பணம் போச்சே... போச்சே... என கதறி அழுதார். போலீசார் விசாரணை நடத்தியதில்,  புதுச்சேரி புது சாரம் வெங்கடேஸ்வரா நகர் அவ்வை வீதியை சேர்ந்த ரமணன் மனைவி பர்வதம் (70) என்பதும், அவரது சொந்த ஊர் கள்ளக்குறிச்சி என்பதும், அவருக்கு புதுச்சேரி, கள்ளக்குறிச்சி மற்றும் சென்னையில் உறவினர்கள் இருப்பதும்  தெரியவந்தது. கடந்த 6 மாதமாகத்தான் ஈஸ்வரன் கோயில் இடத்தில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். உறவினர் ஒருவரிடம் அறிவுரை கூறி அந்த பணத்தை ஒப்படைத்தனர். மேலும், மூதாட்டி பர்வதத்தை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Tags : Newcomer ,roadside grandmother , Excitement ,roadside ,elder,knife
× RELATED புதுவை பாரதியார் நினைவு இல்லம்