×

செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது தலைமை ஆசிரியரிடம் விசாரணை

தண்டராம்பட்டு, நவ.7: தண்டராம்பட்டு அருகே அரசு பள்ளியில் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பழையனூர் ஊராட்சி அத்திப்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 6 மாணவிகள், 8 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக கிருஷ்ணமூர்த்தியும், உதவி ஆசிரியராக புவனா என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியை புவனா கடந்த சில நாட்களாக மகப்பேறு விடுப்பில் உள்ளார். அவருக்கு பதிலாக வேலையாம்பாக்கம் அரசு பள்ளி ஆசிரியர் மதலைமுத்து நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 3ம் தேதி முதல் பள்ளிக்கு வருகிறார்.

இந்நிலையில், ஆசிரியர் மதலைமுத்துவும், தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியும் வகுப்பறையில் தங்களது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்து சில்மிஷம் செய்வதாகவும், இதை வெளியே யாரிடமாவது தெரிவித்தால் பெயிலாக்கி விடுவோம் என மிரட்டியதாக மாணவிகள், தங்களது பெற்றோரிடம் கூறி அழுதனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து வாணாபுரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தனர்.. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிந்து, ஆசிரியர் மதலைமுத்துவை நேற்று கைது செய்தார். பின்னர், அவரை திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார். மேலும், தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் மாணவிகளின் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : head of state school teacher ,
× RELATED சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார்