வேலூர், நவ.5:வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யும் பணி நேற்று தொடங்கியது.தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் முதல் அரசு அதிகாரிகள் வரை சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு அனைத்து பணிகளும் செய்து முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகள் அந்தந்த மாவட்டங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சோதனை நடந்து வருகிறது. அதாவது, வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி வேலூர் பிடிஓ அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இப்பணியில் பெங்களூர் பெல் நிறுவன பொறியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளனர். இதில் மொத்தம் 1,824 கட்டுப்பாட்டு கருவிகளும், 3,051 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிப்பாக்கப்பட்டது. அங்கு அந்த பணி நேற்றுவுடன் முடிவு பெற்றது.
இதையடுத்து வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யும் பணி அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று தொடங்கியது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சுப்புலட்சுமி, மாநகராட்சி 1வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், பெங்களூர் பெல் நிறுவன பொறியாளர் காவேரி பரித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சுப்புலட்சுமி கூறியதாவது:
வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து வந்துவிட்டது. அது சோதனை செய்யும் பணியில் பெல் நிறுவன பொறியாளர்கள் 18 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.முதற்கட்டமாக வேலூர் பிடிஓ அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த 4875 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிப்பார்க்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உள்ள 1,307 கட்டுப்பாட்டு கருவிகளும், 3,070 வாக்குப்பதிவு இயந்திரங்களும் சோதனை செய்யும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இந்த வாரத்துக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.