குடியாத்தம் நவ.1: குடியாத்தம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை போலீசார் அதிரடியாக அகற்றினர். குடியாத்தம், கொச அண்ணாமலை தெரு மற்றும் தென்கரை பகுதியில் சாலையின் இருபுறமும் கடையின் விளம்பரப் பலகை, பைக் பார்க்கிங் மற்றும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து, எழுந்த புகாரின் பேரில், குடியாத்தம் டிஎஸ்பி சரவணன் உத்தரவின்பேரில், குடியாத்தம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லபாண்டியன் தலைமையில் போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை போலீசார் நேற்று கொச அண்ணாமலை தெரு, பழைய பஸ் நிலையம், தினசரி காய்கறி சந்தை ஆகிய பகுதியில் சாலையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை, கடை ஆக்கிரமிப்பு ஆகியவற்றை அதிரடியாக அகற்றினர். மேலும், சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளுக்கு அபராதம் விதித்தனர்.