நாகர்கோவில், அக்.15: நாகர்கோவில் பறக்கை பிஸ்மிநகரை சேர்ந்தவர் பாபு உசேன் என்ற தர்பார் உசேன் (34). இவர் கடந்த 2016 ல், முன்னாள் டி.எஸ்.பி. ஒருவரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் மீது கோட்டார் காவல் நிலையத்தில் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் (13ம்தேதி), பறக்கை ரோடு சந்திப்பில் நின்ற பாபு உசேன், அந்த வழியாக வந்த வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி, பாபு உசேனை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.