திருப்பூர்,அக்.10: இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் அரசாணை எண்; 318/30.08.2019 என்பது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் திருமடங்களின் சொத்துக்கள் விவசாய விளைநிலங்கள், கட்டிடங்கள், காலி மனைகள் ஆகியவற்றை நீண்ட காலம் யார் அனுபவித்து வருகிறார்களோ, அவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தல் அல்லது பெயர் மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றிக்கு அனுமதிகொடுக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஏற்கனவே பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில்களின் சொத்துக்கள், நிலங்கள் ஆகியவை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சாமி பெயரில் உள்ள சொத்துகளை பட்டா மாறுதல் செய்ய முடியாது. ஆனால் நீண்ட கால குத்தகை வாடகை ஆகியவற்றிக்கு விட முடியும். ஏற்கனவே குத்தகைதாரர்கள், வாடகை தாரர்கள் கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்பு மூலம் மோசடி ஆவணங்களை தயார் செய்து அபகரித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு ஆக்கிரமிப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். மேலும் இந்த உத்தரவு சட்ட விரோதமானதாகும். இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு கூறியுள்ளனர்.