×

அவ்வை சண்முகம் சாலையில் சீரமைப்பு பணி மீண்டும் தொடக்கம் நாகர்கோவிலில் முன்னறிவிப்பின்றி போக்குவரத்து மாற்றம் ஐந்து நாட்கள் அமலில் இருக்கும் என்று போலீசார் தகவல்

நாகர்கோவில், அக்.10: நாகர்கோவில் கோட்டார், அவ்வை சண்முகம் சாலையில் சீரமைப்பு பணிகளுக்காக முன்னறிவிப்பு ஏதுமின்றி மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் கட்டபொம்மன் சந்திப்பு முதல் ஒழுகினசேரி வரை பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு குழாய்கள், மேன்-ஹோல்கள் பொருத்தப்பட்டன. பின்னர் இந்த சாலை சீரமைக்கப்படாமல் போக்குவரத்துக்கு கடும் இடையூறாக விளங்கி வந்தது. பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள், போராட்டங்கள் நடந்ததையடுத்து ஒருவழியாக சாலை சீரமைக்கப்பட்டு தார் போடப்பட்டது.இந்தநிலையில் கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து மீனாட்சிபுரம் வரையில் சமீபத்தில் சாலையில் அலங்கார தரைக்கற்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. அப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் போக்குவரத்து நடந்தது. ஆனால் சாலை சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முதல் இந்த வழித்தடத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சாலைகள் பேரிகார்டுகள் வைத்து மூடப்பட்டது. அதிகாலை முதல் மீனாட்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ஒழுகினசேரி வழியாக வரவேண்டிய பஸ்கள் கோட்டார், சவேரியார்கோயில் சந்திப்பு, செட்டிக்குளம் சந்திப்பு, மாவட்ட கலெக்டர் அலுவலக ரவுண்டானா, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு வழியாக வடசேரிக்கு இயக்கப்பட்டன. அதுபோல கோட்டாறில் இருந்து வரும் வாகனங்கள் மீனாட்சிபுரம் பஸ் நிலையம் வரையிலும், ஒழுகினசேரியில் இருந்து வரும் வாகனங்கள் கட்டப்பொம்மன் சந்திப்பு வரையிலும் அனுமதிக்கப்படுகின்றன.மீனாட்சிபுரம் பகுதியில் ஏற்கனவே போடப்பட்டிருந்த அலங்கார தரைக்கற்கள் அகற்றப்பட்டு, புதிதாக பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிகள் முடிய 5 நாட்கள் ஆகும் என தெரிகிறது. அதுவரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென போக்குவரத்து மாற்றம் செய்தது வாகன ஓட்டிகளை கடும் அவதிக்கு உள்ளாக்கியது.

Tags : road ,Avivai Shanmugam ,Nagercoil ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...