×

சேலம் அருகே நடந்த மனநிலை பாதிக்கப்பட்டவர் கொலையில் 3 பேர் சரண்

சேலம், செப்.25: சேலம் அருகே மனநிலை பாதிக்கப்பட்டவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் போலீசிலும், ஒருவர் கோர்ட்டிலும் சரணடைந்தனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கடந்த 10ம் தேதி, இடைப்பாடி வெள்ளாளபுரம் கிராமத்தை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட முகேஷ் (45) என்பவரை மர்மநபர்கள் தாக்கிவிட்டு தப்பினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகேஷ், உயிரிழந்தார். இதுபற்றி மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையிலான போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.அதில், சம்பவம் நடந்த இடத்தில் தனியார் கட்டிடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை போலீசார் ஆய்வு செய்தனர். சம்பவத்தன்று 5 பேர் கும்பல், முகேசை சரமாரியாக அடித்து உதைத்து கீழே தள்ளி விட்டுச் செல்வது பதிவாகியிருந்தது. அதன்மூலம் முகேசை அடித்துக்கொன்ற இம்பிள்ளை தப்பகுட்டை பூசாரியூர் காட்டுவலவை சேர்ந்த அய்யந்துரை மகன் கார்த்திக்கை (23) கைது செய்தனர். விசாரணையில், டாஸ்மாக் கடை வாசலில் பீர் பாட்டிலை தள்ளிவிட்டு உடைத்ததால் முகேசை சரமாரியாக  தாக்கியதாக தெரிவித்தார். அதன்பின், கார்த்திக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மகுடஞ்சாவடி போலீசில், கொலையில் தொடர்புடைய தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சந்திரநல்லூரை சேர்ந்த உதயகுமார் மகன் பூபதி (37), தப்பகுட்டை காளிகவுண்டனூரை சேர்ந்த குமார் மகன் ஓம்சக்தி (23) ஆகிய 2 பேர் சரணடைந்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே இவ்வழக்கில் தொடர்புடைய தப்பகுட்டை கோழிப்பூரை சேர்ந்த ரகுபதி மகன் அஜித்குமார் (21), நாமக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஓரிருநாளில் அஜித்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : Charan ,Salem ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...