விழுப்புரம், ஜூன் 19: ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நிலஉரிமைதாரர்கள் முன்வந்து நிலம் வழங்கலாம் என ஆட்சியர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விழுப்புரம் ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் 2019-20ம் நிதியாண்டிற்கு நில எடுப்புக்கான பணிகள் மேற்கொள்ளும்போது தனியார் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நில எடுப்பு செய்து ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள நில உரிமையாளர்கள், பட்டாதாரர்கள் தாமாகவே முன்வந்து ஆதிதிராவிடர் நலத்துறைக்கு நிலம் அளிக்கலாம். அவர்கள் அளிக்க முன்வரும் நிலம், வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கிட ஏதுவாக இருப்பின் பேச்சுவார்தையின் மூலம் நிர்ணயம் செய்யப்படும் நிலமதிப்பின் அடிப்படையில் நில கிரயத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.