ஓமலூர், ஜூன் 11: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிலுவை தாள்களுக்கு சிறப்பு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றிருந்த பொறியியல் கல்லூரிகளில் பயின்ற இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான சிறப்பு தேர்வுகள் எழுதுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி முதல் ஜூலை மாதம் 4ம் தேதி வரை பல்கலைக்கழக உளவியல் துறையில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இதேபோல், பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக பயின்ற ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள், அவர்களது படிப்பை அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் முடிக்காமல் நிலுவைதாள் வைத்துள்ளவர்களுக்கான சிறப்பு தேர்வு வரும் ஜூலை மாதம் 1ம் தேதியில் இருந்து 4ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான கால அட்டவணை www.periyaruniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஜூன் சிறப்பு தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் கொண்டுவர வேண்டும். ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள் சிறப்பு தேர்வுக்கான நுழைவு சீட்டினை அந்தந்த கல்லூரிகளில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.