×

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 7ம் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து

திருவண்ணாமலை, ஜூன் 4: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகாக்களில் ஜமாபந்தி வரும் 7ம் தேதி தொடங்குகிறது. இதனால் வரும் 20ம் தேதி வரை குறைதீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆண்டு தோறும் நடைபெறும் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி வரும் 7ம் தேதி தொடங்கி, 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜமாபந்தியில், வருவாய் நிர்வாக கணக்குகள் தணிக்கை, பட்டா மாறுதல், வருவாய்த்துறை தொடர்பான புகார்கள், குறைகளுக்கு தீர்வு காணப்படும்.அதன்படி, செய்யாறு தாலுகாவில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் வரும் 7ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். நிறைவு நாளன்று விவசாயிகள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், கீழ்பென்னாத்தூர் தாலுகாவில், டிஆர்ஓ ரத்தினசாமி தலைமையில், வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரையும், திருவண்ணாமலை தாலுகாவில், ஆர்டிஓ தேவி தலைமையில் வரும் 17ம் தேதி வரையிலும், போளூர் தாலுகாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் வரும் 13ம் தேதி வரையிலும், வந்தவாசி தாலுகாவில் கலால் உதவி ஆணையர் தலைமையில் வரும் 20ம் தேதி வரையிலும் நடைபெறும்.மேலும், கலசபாக்கம் தாலுகாவில் வரும் 11ம் தேதி வரை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா தலைமையிலும், சேத்துப்பட்டு தாலுகாவில் செய்யாறு ஆர்டிஓ அன்னம்மாள் தலைமையில் வரும் 12ம் தேதி வரையிலும், வெம்பாக்கம் தாலுகாவில் வரும் 13ம் தேதி வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லாவண்யா தலைமையிலும் நடக்கிறது.

மேலும், ஆரணி தாலுகாவில், ஆரணி ஆர்டிஓ மைதிலி தலைமையில் வரும் 13ம் தேதி வரையிலும், தண்டராம்பட்டு தாலுகாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் அரிதாஸ் தலைமையில் வரும் 11ம் தேதி வரையிலும், செங்கம் தாலுகாவில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வின்செனட் ராஜசேகர் தலைமையில் வரும் 13ம் தேதி வரையிலும், ஜமுனாமரத்தூர் தாலுகாவில் பழங்குடியினர் நல திட்ட அலுவலர் தலைமையில் 10ம் தேதி வரையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நடைபெறுவதால், திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் வரும் 20ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : Tiruvannamalai district ,
× RELATED மாணவியிடம் பாலியல் சில்மிஷம் விவசாயி மீது போக்சோ வழக்கு ஆரணி அருகே