கூடலூர், மே 30: கூடலூர் அருகே சுற்றுலா பயணிகள் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இருந்து மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் நேற்று முன்தினம் ஊட்டியை சுற்றிப் பார்த்து விட்டு முதுமலை செல்வதற்காக கூடலூர் வழியாக வந்துள்ளனர். இவர்கள் நேற்று காலை சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களை பார்த்துவிட்டு நடுவட்டம் வழியாக இறக்கமான சாலையில் வந்தனர்.
அப்போது திடீரென வேனில் பிரேக் பிடிக்காததால் சில்வர் கிளவுட் பகுதியில் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் பிரேமா, சீனிவாசன் இரண்டு பேருக்கு தலையிலும், சான்டில்யா, பாபு ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் முதலுதவி சிகிச்சைக்குப் பின் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.