திருவாரூர், மே 29: திருவாரூர் மாவட்டத்தில் வரும் 6ம் தேதி முதல் வருவாய்த்துறையின் ஜமாபந்தி முகாம் நடைபெறுவதாக கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் 1428ம் பசலிக்கான வருவாய் துறையின் ஜமாபந்தி கணக்குகள் முடித்தல் நிகழ்ச்சியானது அடுத்த மாதம் 6ம் தேதி முதல் துவங்கி அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அதன்படி 6ம் தேதி முதல் 26ம் தேதி வரை மன்னார்குடி தாலுகா அலுவலகத்தில் கலால் உதவி ஆணையர் தலைமையிலும், 19ம் தேதி வரையில் நன்னிலத்தில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் தலைமையிலும், 18ம் தேதி வரையில் திருவாரூரில் டி.ஆர்.ஒ தலைமையிலும், குடவாசலில் ஆர்.டி.ஒ தலைமையிலும், வலங்கைமானில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டியில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும் நடைபெறுகிறது.
இதேபோல் 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை நீடாமங்கலத்தில் எனது (கலெக்டர்) தலைமையிலும், கூத்தாநல்லூரில் மன்னார்குடி ஆர்.டி.ஒ தலைமையிலும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியானது நடைபெறுகிறது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 கிழமைகள் தவிர பிற வேலை நாட்களில் காலை 10 மணி முதல் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் அனைவரும் தங்களது தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.