கரூர், மே 29: கரூர் வெள்ளியணை குடகனாற்றில் படர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். கரூர் மாவட்டம் வெள்ளியணையில் இருந்து ஜெகதாபி செல்லும் சாலையில் குடகனாறு செல்கிறது. இந்த பகுதியின் வழியாக செல்லும் இந்த ஆறு, உப்பிடமங்கலம் வழியாக ஆற்றை நோக்கிச் செல்கிறது. இந்த பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெற்று வந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, குடகனாற்றின் குறுக்கே தரைப்பாலத்தை அகற்றி விட்டு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, போதிய மழையின்மை காரணமாக, ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. ஆனால், மழைக்காலங்களில் வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் வகையில், குடகனாறு பகுதியை சுற்றிலும் அதிகளவு முட்புதர்கள் வளர்ந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே, ஆற்றின் போக்கை மாற்றும் வகையில் அதிகளவு படர்ந்துள்ள இந்த முட்செடிகளை முற்றிலும் அகற்ற தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.