மூணாறு, மே 21: மூணாறில் முக்கிய சுற்றுலா தலமான மாட்டுப்பட்டி அணையில் விடுமுறை நாட்களை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் அணையில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
தென்னகத்து காஷ்மீர் என்றுஅழைக்கப்படும் மூணாறில் தற்போது காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், பிற்பகல் இதமான காலநிலை ஏற்படுகிறது தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மூணாறின் நிலவும் காலநிலையை அனுபவிக்கவும், கோடை விடுமுறையை கழிக்கவும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். மூணாறில் முக்கிய சுற்றுலா தலமாக மாட்டுப்பட்டி கருதப்படுகிறது. இங்கு எக்கோ பாயிண்ட், குண்டலை அணை மற்றும் டாப் ஸ்டேஷன் போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. இதனால் தமிழ்நாடு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மூணாறில் அதிகரித்துள்ளது. நேற்று மூணாறு மாட்டுப்பட்டி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் இயற்கை அழகை கண்டு ரசிக்க படகு சவாரியும் மேற்கொண்டனர்.