வாழப்பாடி, மே 15: வாழப்பாடி நர்சு மீது புகார் தெரிவித்து, சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தாயுடன் நடுரோட்டில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் வாழப்பாடி கணபதி கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் இந்திராணி (47). இவரது தாய் பூங்கோதை (75), கடந்த இரு தினங்களாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதியடைந்து வந்தார். இதனையடுத்து இந்திராணி, தனது தாயாரை நேற்று முன்தினம் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் நேற்று, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த இந்திராணி, திடீரென ஓமலூர் மெயின்ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து அழைத்து சென்றனர். இதுகுறித்து இந்திராணி கூறுகையில், ‘‘வாழப்பாடி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் விஸ்வகுமாரி என்ற நர்ஸ், அங்கு வரும் நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். நேற்று எனது தாயாரை அழைத்துச் சென்றபோது, வேண்டுமென்றே தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால், நானும், எனது தயாரும் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானோம். எனவே, சம்பந்தப்பட்ட நர்சு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.