சென்னிமலை, மே 9: மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் சிறப்பு யாகம் நேற்று நடந்தது. இதற்காக கோயிலில் 8 அடி நீளம், 4 அடி அகலம், 4 அடி உயரத்தில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பி அதற்குள் நந்தி சிலை வைக்கப்பட்டது. பின்னர் கோவில் குருக்கள் ராமநாதசிவம் தலைமையில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டு வர்ண ஜப வேள்வி, சிவபெருமானுக்கு ருத்ரா அபிஷேகம் செய்தனர். சத்தியமங்கலம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி கணபதி ஹோமத்துடன் யாக பூஜை நேற்று நடந்தது. கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து வேதம் ஓதி மழை பெய்ய வேண்டி பூஜை செய்தனர். இதைத்தொடர்ந்து, பக்தர்கள், பொதுமக்கள் வருணபகவானுக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். பண்ணாரி அம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரார்த்தனை செய்யப்பட்டது