×

பைக் விபத்துகளில் இருவர் பரிதாப பலி

அம்பை, மே 9: அம்பை அருகேயுள்ள கோவில்குளம் வேளார் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் பிரகாஷ் (22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சுரேஷ் ( 25), அவரது தம்பி நாகராஜ் (23) ஆகிய 3 பேரும் நேற்று ஒரே பைக்கில் பாபநாசத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றனர். சிவந்திபுரம்- பாபநாசம் சாலையில் பாலம் வேலை நடந்து வருவதால் மாற்றுப் பாதையில் திரும்பி அகஸ்தியர்பட்டி வழியாக தென்காசி சாலை வழியாக ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பைக்கை பிரகாஷ் ஓட்டி வந்தார். அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது நிலை தடுமாறிய பைக் சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த அம்பை இன்ஸ்பெக்டர் மன்னவன், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

மற்றொரு சம்பவம்: களக்காடு அருகே உள்ள மாவடியை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி (71). இவர் கடந்த 4ம் தேதி சாலைப்புதூர் ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் ராமசாமி படுகாயம் அடைந்தார். அவர் மீது மோதிய பைக் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. பைக்கை ஓட்டி வந்தவர் யார்? என்பதும் தெரியவில்லை. இதனிடையே படுகாயம் அடைந்த ராமசாமியை பொதுமக்கள் மீட்டு, நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று முன் தினம் இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டி வந்தவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Two ,bike crashes ,victims ,
× RELATED டூவீலர் திருடியவர் கைது