கள்ளக்குறிச்சி, மே 7: சென்னை ஆண்டார்குப்பம் கண்ணியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் ராமு மகன் வினோத்குமார்(18). இவரும் இவருடைய நண்பர் சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் தீபக்(20) ஆகிய இருவரும் கடந்த 4ம் தேதி இரவு நண்பரை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு வினோத்குமார் பைக்கில் சென்றனர். அங்கு நண்பரை பார்த்து விட்டு சென்னை திரும்பினர். பைக்கை தீபக் ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு கிராமம் அருகே வந்த போது, சாலையோரத்தில் உள்ள பெயர் பலகையில் பைக் மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில், தலையில் படுகாயம் அடைந்த தீபக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த வினோத்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் சப்- இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.