புதுக்கோட்டை , ஏப் 30: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடுமுத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா நேற்று நடைபெற்றது. வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 21ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் மண்டகபடிதாரர்கள், கரைகாரர்கள் சார்பில் சுவாமிக்கு சந்தனகாப்பு, அபிஷேக ஆராதனைகளும், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தன.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருள வானவேடிக்கைகள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரைவடம்பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் தொடர்ந்து, சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருவிழாவில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். வடகாடு போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.