திருவெண்ணெய்நல்லூர், ஏப். 25: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது மணக்குப்பம் கிராமம். இந்த ஊர் கடலூர்-சித்தூர் மாநில நெடுஞ்சாலையின் அருகாமையிலே அமைந்துள்ளது. ஆமூர், குப்பம், ஒட்டனந்தல் சாலையும், மணக்குப்பம், பணப்பாக்கம் செல்லும் சாலையும், கடலூர் - சித்தூர் சாலையில் இணையும் கூட்டுசாலையாகவும் இப்பகுதியின் கிராம புறங்களுக்கு சிறிய நகரம்போல அமைந்துள்ளது. கடலூர் - சித்தூர் சாலையிலிருந்து சுமார் ஒன்று முதல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆமூர், குப்பம், ஒட்டனந்தல், மணக்குப்பம், பணப்பாக்கம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராம மக்கள் நகர்ப்புறங்களுக்கு செல்வதற்கு மணக்குப்பம் கூட்ரோட்டை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்லும் மைய பகுதியாக இந்த கூட்ரோடு பகுதி அமைந்துள்ளது.
மேலும் கடலூர் - சித்தூர் சாலையில் வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடலூர் - சித்தூர் சாலையில் வேகத்தடை இல்லாமல் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. அதிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அப்பகுதியில் பெருமளவில் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் மணக்குப்பம் பகுதியில் வேகத்தடை அமைக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். எனவே மாவட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.