நாகர்கோவில், ஏப்.18: குமரியில் 2வது நாளாக கோடை மழை பெய்து மக்களை குளிர்வித்தது. குமரியில் கடந்த இருமாதங்களாக வெயில் வாட்டி வதக்கியது. அதிலும், கடந்த ஒரு மாதமாக அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் வகையில் வெயில் அனலாக கொளுத்தியது. காலை 7 மணிக்ேக வெயில் சுட்டெரித்தது. விளைநிலங்கள் வீட்டுமனைகள் ஆனதுடன், குளங்களில் மீன் வளர்ப்போர் தண்ணீரை திறந்து விட்டதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. காற்றும் வீசாததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். பதனீர், தர்பூசனி, மோர், சர்பத், இளநீர், பானகம் என இயற்கை குளிர்பானங்கள் விற்பனையும் பலமடங்கு அதிகரித்துள்ளது. வரலாறு காணாத வகையில், கடந்த வாரம் வெயில் 100 டிகிரி பாரன்கீட்டை தாண்டியது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது. இதனால் பெருஞ்சாணி அணையில் இருந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் கோடை மழையை எதிர்பார்த்து அனைவரும் காத்து இருந்தனர். இதற்கேற்ப கடந்த இருநாட்களுக்கு முன்பு, பூதப்பாண்டி, சீதப்பால், அருமனை உள்பட பல பகுதிகளில் கோடை மழை பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கியது. நாகர்கோவில் நகரில் நேற்று முன்தினம் மாலை மேகம் கருத்தாலும் மழை பெய்யவில்லை. இந்நிலையில் நேற்று காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1 மணிக்கு பூதப்பாண்டி, சீதப்பால் பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. 3 மணி வரை பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து சாரலாக பெய்தது. மதியம் 2 மணிக்கு பின்னர் நாகர்கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்ெகடுத்து ஓடியது. பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, செம்மாங்குடி சாலை, வடசேரி உள்பட பல பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் கழிவுநீருடன் கலந்து ஓடியது. ஒருநாள் மழைக்கே தாக்கு பிடிக்காத கழிவுநீர் கால்வாய்கள் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி கார்களில் வந்தவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து இரு நாட்கள் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், கோடை மழை மேலும் சில நாட்கள் பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இம்முறை தென்மேற்கு பருவமழையும் நன்றாக பொழியும் என எதிர்பார்க்கின்றனர். இதனால் கன்னிப்பூ சாகுபடிக்கும், பொடி விதைப்பிற்கும் விவசாயிகள் தாயராகி வருகின்றனர். நேற்று காலை வரை அதிகபட்சமாக குழித்துறையில் 54.2, புத்தன் அணை பகுதியில் 54 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 1.40 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணை 18.20 அடியாகவும், சிற்றார்-1ல் 5.18 அடியும், சிற்றார்-2ல் 5.28 அடியும், பொய்கையில் 10.30 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 43.64 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது.
மழையளவு (மி.மீ)
பூதப்பாண்டி : 34.6
சிற்றார்-1 : 35.4
கன்னிமார் : 42.4
குழித்துறை : 54.2
பேச்சிப்பாறை : 53.2
பெருஞ்சாணி : 53.4
புத்தன் அணை : 54
சிவலோகம் : 7
சுருளோடு : 30
குளச்சல் : 11.4
இரணியல் : 14.4
கோழிப்போர்விளை : 14
அடையாமடை : 11
ஆனைக்கிடங்கு : 6.2