திருவாரூர், ஏப். 17: நாகை எம்பி தொகுதி மற்றும் திருவாரூர் எம்எல்ஏ தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை விந்தியா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். நாகை எம்பி தொகுதியில் அதிமுக வேட்பாளராக தாழை சரவணன் மற்றும் திருவாரூர் எம்எல்ஏ தொகுதி வேட்பாளராக ஜீவானந்தம் ஆகியோர் போட்டியிடும் நிலையில் இவர்கள் இருவருக்கு ஆதரவாக அமைச்சர் காமராஜ் தொகுதி முழுவதும் பொது மக்களிடம் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில் இவர்கள் இருவரையும் ஆதரித்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு நேற்று கொரடாச்சேரி, கூத்தாநல்லூர் மற்றும் குடவாசல் ஆகிய இடங்களில் நடிகை விந்தியா தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் காமராஜ் தலைமையில் திருவாரூர் கீழவீதியில் இருந்து தொடங்கிய பிரசார பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
அங்கு திறந்தவேனில் இருந்தபடி நடிகை விந்தியா பேசியதாவது, தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு ஏதாவது ஆபத்து வராதா என சிலர் காத்து கிடக்கின்றனர். அவர்களது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. மேலும் மத்தியில் ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது. இந்த பாதுகாப்பு மட்டுமின்றி வல்லரசு இந்தியாவை உருவாக்க அனைவரும் சபதம் ஏற்போம். அந்த வகையில் நாகை எம்பி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சரவணனையும், திருவாரூர் எம்எல்ஏ தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜீவானந்தத்தையும் இரட்டை சிலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.