கம்பம், ஏப்.8: கம்பம் பஸ்ஸ்டாண்ட் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் பயணிகள் நிற்கவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கம்பம் நகருக்குள் அதிக அளவில் கஞ்சா புழக்கம் உள்ளது. குறிப்பாக கம்பம் பஸ்ஸ்டாண்ட் மிக பழமையான கட்டிடமாக உள்ளதால் பயணிகள் நிற்க முடியாத அளவிற்கு உள்ளது. இந்த இடங்களை இரவுநேரங்களில் போதைக்கு அடிமையானவர்கள் ஆக்கிரமித்து கொள்கின்றனர். இரவு 7 மணிக்கு மேல் கம்பம் பஸ்ஸ்டாண்ட் போதை ஆசாமிகளின் பிடியில் சிக்கி கொள்கிறது. குறிப்பாக, கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கிறது. சிறுவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. இதனைக் குடிக்கும் போதை ஆசாமிகள் பஸ்களுக்காக நிற்கக்கூடிய வெளியூர் பயணிகளை குறிவைத்து புகையினை ஊதுகிறார்கள். பஸ்ஸ்டாண்ட் பயணிகள் நிற்கவேண்டிய பிளாட்பாரம் முழுவதும் பிராந்தி பாட்டில்களாக கிடக்கின்றன. போதையேற்றிவிட்டு ஆபாசமான வார்த்தைகளில் திட்டுவோரை உள்ளூர் போலீசார் கண்டு கொள்வதில்லை. இதனால் இரவில் பெண் பயணிகள் நிற்பதற்கே அஞ்சுகின்றனர். இதே நிலை நீடித்தால் கஞ்சாவின் பிடியில் கம்பம் சென்றுவிடும் ஆபத்து உள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், `` கம்பம் நகரில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் உள்ளது. போலீசார் அவ்வப்போது தடுத்தும் போதை ஆசாமிகளை கட்டுப்படுத்த முடியவில்லை இதனால் முகம் சுளிக்கும் ஆபத்து உள்ளது. கம்பம் பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் போதை ஆசாமிகளை அப்புறப்படுத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.